காணாமல் போன தமிழர்கள் எப்போதுதான் கிடைப்பார்கள்… இலங்கை அரசை கண்டித்து 27ம் தேதி கதவடைப்பு
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போன தமிழர்களை மீட்டுத் தரக் கோரி வரும் 27ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
யாழ்ப்பாணம்: இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி வரும் 27ம் தேதி இலங்கையில் கதவடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். அதுகுறித்த நீதி விசாரணைகள் நடைபெற்றாலும் தீர்வு இன்னும் எட்டப்படாத நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 64 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் அவர்களுக்கு எதுவும் கூறாமல் அமைதி காக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் கதவடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், "இந்தப் போராட்டத்தை ஏன் நடத்துகின்றோம் என்று கண்ணீருடன் எடுத்துக் கூறினோம். ஆனாலும் இதுவரை எங்களுக்கு எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, வரும் 27ம் தேதி கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கதவடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், மே தினத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுசரிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.