பயங்கரவாதி கே.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சொல்வது சரத் பொன்சேகா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்கிற கே.பி. ஒரு பயங்கரவாதி அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சரத் பொன்சேகா டிவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:
ரணில் பதவி பிரமாண நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சே எனது அருகிலேயே அமர்ந்திருந்தார். பல முறை என்னைப் பார்த்து பேச முயற்சித்தார். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன்.
ஒரு தடவை பாம்பு கொத்தியது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒருமுறை கைவிடுவது பிழை என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டேன்.
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என்கிறா சட்ட அமைச்சர். ஆனால் கே.பி. ஒரு பயங்கரவாதி... என அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக என எனக்குத் தோன்றவில்லை. பெரிய பீரங்கி அல்லது மோட்டார் குண்டு ஒன்றின் இரும்புப் பகுதி பட்டதால் அவரது மண்டை பிளவுபட்டிருக்க வேண்டும்.
2 பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம் அமைத்துள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதில் தவறில்லை.
போரின் போது சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டது என அமெரிக்கா கருதியதனால் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே, ராஜபக்சே அல்லது உயர் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பொன்சேகா கூறினார்.