ரணிலுக்குத்தான் மக்கள் செல்வாக்கு: ராஜபச்சே பிரசார மேடையில் முன்னாள் அமைச்சர் பேச்சால் பரபரப்பு!
கொழும்பு: இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்குத்தான் மக்கள் ஆதரவு இருப்பதாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பிரசார மேடையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் வரும் 17-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரது பிரசார மேடையில் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே பங்கேற்று பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்கின்றனர்; ரணில் விக்கிரமசிங்கேதான் வெற்றி பெறுவார் எனக் கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காமினி லொக்குகே, தாம் பேசியது தவறுதான்... மகிந்த ராஜபக்சேவுக்கு பின்னால்தான் மக்கள் இருக்கிறார்கள்.. தாம் வாய்தவறி பேசிவிட்டதாக கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார்.
காமினியின் இந்த பேச்சுதான் இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்.. அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த காமினி லொக்குகே நீண்டகாலம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர்தான் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தாவியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.