இசைப்பிரியா அருகில் அமர்ந்திருக்கும் பெண் பெயர் ‘உஷாளினி’... அடையாளம் கண்டனர் பெற்றோர்
கொழும்பு: இறுதிப் போரின் போது ராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு சிதைக்கப் பட்டே இசைப்பிரியா கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றொரு பெண்ணை அவரது பெற்றோர் அடையாளம் கண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
ஆனால், வழக்கம் போல் அத்தகவலையும் இலங்கை ராணுவம் மறுத்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இசைப்பிரியா ராணுவத்தின் வசம் உயிருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.
மற்றொரு பெண்...
அப்புகைப்படங்களில் பின்புறம் கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவின் அருகில் மற்றொரு பெண்ணும் அதே நிலையில் அமர்ந்துள்ளார்.
உஷாளினி...
ஊடகங்களில் வெளியான அப்புகைப்படங்களைப் பார்த்த அப்பெண்ணின் பெற்றோர், அவரின் பெயர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி (19) என உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாயம்...
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இறுதிப்போரின்போது நாங்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எங்களது மகள் உஷாளினி, 2009 மே மாதம் காணாமல் போனார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம்.
அடையாளம்....
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எங்களது மகள் இருப்பதை அடையாளம் கண்டோம்" எனத் தெரிவித்துள்ளனர்.