இலங்கை நாடாளுமன்ற தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கிறார் 'கூகுளாண்டவர்! அப்படியும் குண்டு வீச்சு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் விதிமீறல்கள் கூகுள் மேப்பில் அப்லோடு செய்யப்பட்டு அவை உலகமெங்கும் பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 15வது பொதுத்தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில்தான் முன்னாள் அதிபர், ராஜபக்சே போட்டியிடுகிறார். நாடு முழுவதும் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, 12,314. இலங்கையில் பதிவு செய்திருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 1,50,44,490.
ராஜபக்சே மற்றும் அவரது குரூப், விதிமீறல்கள் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதால், பல நாட்டு பிரதிநிதிகளும், தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டுவருகின்றனர். தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (CMEV) அமைப்பு, தேர்தல் விதிமீறல் சம்பவங்களை கூகுள் மேப்பில் தரவேற்றம் செய்துவருகிறது.
இலங்கை வரைபடத்தில், எங்கெங்கு சிவப்பு புள்ளி வைக்கப்பட்டுள்ளதோ அங்கு தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது என்று பொருள்படும் வகையில் மேப் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்படுதல், ரகசியமாக வாக்களிக்கவிடாமல் தடை செய்தல், வாக்குச்சாவடிக்குள் கூட்டம்போடுதல் என பல பிரிவுகளில் விதிமீறல்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தும், இலங்கையில் நடைபெறும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க முடியும்.
இதனிடையே, இலங்கையில் தமிழ்தேசிய கூட்டணி வேட்பாளர்கள் வீட்டில் குண்டுவீச்சு சம்பவம் நேற்று நடந்துள்ளது.மாவை சேனாதிராஜா, ஸ்ரீகாந்தா வீட்டில் வீசப்பட்ட குண்டுவீச்சினால் இருவரின் வீடுகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.