கோத்தபாயவிடம் விடுதலைப் புலிகளைப் பற்றி போட்டு கொடுத்தேன்- கேபி பரபர பேட்டி
2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் சிலர் எங்கே என கோத்தபாய தம்மிடம் கேட்டதாகவும் 2 மணிநேரம் அவருடன் உரையாடினேன் எனவும் புலிகளின் மூத்த தலைவர் கேபி தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவிடம் விடுதலைப் புலிகள் தொடர்பாக தகவல்களை தெரிவித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் என்ற கேபி.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்தவர் கேபி. பிரபாகரனுக்கு அடுத்த நிலை தலைவராக இருந்து வெளிநாட்டில் இருந்து புலிகளுக்கான ஆயுதங்களை அனுப்பியவர்.
ஆனால் 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் கேபி ஓரம்கட்டப்பட்டார். இறுதி யுத்த காலத்தில் மீண்டும் கேபி வெளிநாட்டு பொறுப்பாளராக்கப்பட்டார்.
கேபி கைது
2009-ம் ஆண்டு மே மாதத்துடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மலேசியாவில் இருந்த கேபி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
கிளிநொச்சி இல்லம்
தற்போது போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கிளிநொச்சியில் பராமரித்து வருகிறார் கேபி. இந்நிலையில் இந்தியாவின் ஜீ குழுமத்தின் சர்வதேச செய்திகளுக்கான 'WionTv' சேனலுக்கு கேபி ஒரு நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில் 2009-ல் என்ன நடந்தது என்பதை பற்றி கேபி கூறியுள்ளதாவது:
இலங்கை உளவுத்துறை
2009-ம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மலேசியாவில் அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்கு இலங்கை உளவுத்துறை உதவியது எனக்கு பின்னர்தான் தெரியவந்தது.
கொழும்பில் கோத்தபாய வீட்டில்...
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். கொழும்பில் அப்போது பாதுகாப்புத் துறை செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சேவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
புத்தர் சிலை
நிச்சயம் என்னை கொல்லத்தான் போகிறார்கள் என்கிற நிலையில்தான் அங்கு சென்றேன். கோத்தபாய ராஜபக்சேவின் வீட்டில் ஒரு புத்தர் சிலை இருந்தது. அந்த சிலையைப் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.
மறுபிறப்பு
எனக்கு எதுவும் நடக்காது என நினைத்துக் கொண்டேன். நான் மறுபிறப்பு எடுத்ததாக கருதினேன். மாடியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே இறங்கி வந்தார். இருவரும் கைகளை குலுக்கிக் கொண்டோம்.
கோத்தபாய கேட்டது..
நாங்கள் 2 மணிநேரம் உரையாடினோம். அப்போது என்னைப் பற்றியும் சில விடுதலைப் புலிகள் எங்கே என்பது பற்றியும் கோத்தபாய கேட்டார். என்னுடைய எதிர்கால திட்டம் என்ன என்பது பற்றியும் கோத்தபாய கேட்டு தெரிந்து கொண்டார்.
கொழும்பில் 2 ஆண்டுகாலம்
பின்னர் கொழும்பில் 2 ஆண்டுகாலம் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். அங்கே பல அதிகாரிகள் என்னை வந்து சந்தித்தனர்.
இவ்வாறு கேபி கூறியுள்ளார்.