கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை!
கொழும்பு: இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளரும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அந்நாட்டின் காலி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காலி துறைமுகத்தில் அண்மையில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் பெருமளவு ஆயுதங்கள் இருந்தது அம்பலமானது. இந்த நிறுவனத்துக்கு கோத்தபாய ராஜபக்சே சட்டவிரோதமாக ஆயுதங்களை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையே இந்நிறுவனத்துக்கு கோத்தபாய விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை காலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடையும் வரை கோத்தபாய ராஜபக்சே, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க உட்பட 4 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்குமாறு அந்நாட்டின் போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்று கோத்தபாய ராஜபக்சே உட்பட நால்வரும் வெளிநாடு செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.