சட்டவிரோத ஆயுத கடத்தல்: கைதில் இருந்து தப்பினார் கோத்தபாய! பதிலளிக்க 90 நாள் 'டைம்'!!
கொழும்பு: சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்ததான புகார் தொடர்பாக பதிலளிக்க 90 நாட்கள் கால அவகாசம் கிடைத்ததால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனையடுத்து ஊழல் மோசடி புகார்களில் சிக்கிவிடுவோமோ என அஞ்சி மகிந்தவின் தம்பிகளில் ஒருவரான பசில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.
ராஜபக்சே சகோதரர்கள் எதிர்பார்த்தது போலவே மகிந்த, அவரது மனைவி ஷிராந்தி, சகோதரர்கள் கோத்தபாய, பசில் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவில் நிதி மோசடி, சட்டவிரோத ஆயுத கடத்தல் என பல புகார்கள் தெரிவிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் நிதி மோசடி வழக்கு தொடர்பாக பசில் ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
சட்டவிரோத ஆயுதக் கடத்தல் வழக்கில் கோத்தபாய ராஜபக்சே வெளிநாடு செல்லக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சியினரை வளைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்ட புகாரில் மகிந்தவுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இதில் ராஜபக்சேவுக்கு எதிராக சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு பெரும் போராட்டங்கள் வெடித்தன.
இதனால் மகிந்த ராஜபக்சேவிடம் நாளை அவரது வீட்டிலேயே நேரில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இதனிடையே பசில் ராஜபக்சே நாடு திரும்பினார். அவர் நாடு திரும்பிய மறுநாளான நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்தி கைது செய்தது போலீஸ். அவருக்கு மே 5-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டாலும் உடல்நலக் குறைவு என கூறி சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த கோத்தபாய இன்று லஞ்ச ஒழிப்புக் குழுவிடம் ஆஜரானார். அவரிடம் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த காலத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் கோத்தபாயவோ, பல விஷயங்கள் நினைவில் இல்லை.. இதனால் பதிலளிக்க 90 நாள் கால அவகாசம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து அவர் பதிலளிக்க 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் கோத்தபாய ராஜபக்சே உடனே கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியிருக்கிறார்.
பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு பசில் ராஜபக்சேவை கோத்தபாய சந்தித்து பேசிவிட்டு வீடு திரும்பினார்.
இதனிடையே கோத்தபாய, மகிந்த ராஜபக்சே ஆகியோரிடம் விசாரணை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் இன்று போராட்டங்கள், ஊர்வலங்களும் நடத்தப்பட்டன.