யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மிருசுவிலில் 5 வயது சிறுவன் உட்பட 8 தமிழரை கழுத்தறுத்து படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 2000-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் 5 வயது சிறுவன் உட்பட 8 பேரின் சடலங்கள் புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன.
8 தமிழர்களுமே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் ராணுவ சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்க உட்பட 5 பேர் கைது செய்யபப்ட்டனர். இதில் சுனில் ரத்நாயக்கவுக்கு 2015-ம் ஆன்டு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்நிலையில் சுனில் ரத்நாயக்கவுக்கின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவருக்கு கருணை மன்னிப்பு வழங்கியுள்ளார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து சுனில் ரத்நாயக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.