இலங்கை விவகாரத்தில் மோடி அரசுக்கு சரியான புரிதல் இல்லை: சீறும் கோத்தபாய ராஜபக்சே
இலங்கை விவகாரத்தில் மோடி அரசுக்கு சரியான புரிதல் இல்லை என்கிறார் கோத்தபாய ராஜபக்சே.
கொழும்பு: இலங்கை விவகாரத்தில் தற்போதைய மோடி அரசுக்கு சரியான புரிதல் இல்லை என சாடியுள்ளார் இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் போட்டியிட முடியாது. இரு அதிபர் பதவி வகித்ததால் அந்நாட்டு சட்டப்படி மகிந்த ராஜபக்சே போட்டியிட இயலாது.
இதனால் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கோத்தபாய ராஜபக்சே விரிவான பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் கோத்தபாய கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு இலங்கை உறுதி
இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் பாதுகாப்பு ஆபத்து ஏற்படும் போது இந்தியாவுக்கு எதிராக இலங்கையை தளமாக பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்கிற உறுதியை அளித்திருக்கிறோம். இதனால்தான் இந்திய அரசு எங்களுக்கு உதவி செய்தது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர் 'சீனா' மயக்கத்தில் இருந்து வெளியே வந்து இலங்கையுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும்.
மோடி அரசுக்கு புரிதல் இல்லை
முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அதனால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு உதவியை அளித்தது இந்தியா. ஆனால் தற்போதைய மோடி அரசாங்கம், இலங்கை விவகாரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டதை ஊதி பெரிதாக்குகின்றன.
இந்திய அதிகாரிகள் பேச மறுப்பு
இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்தார். அதனால் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு உருவானது. இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட்டதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுடன் இப்போது எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சிகளை இந்திய தலைவர்கள் சந்தித்தனர். ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் கூட எங்களை சந்திக்க விரும்பவில்லை. இது கவலைக்குரியது.
போரை முடித்து வைத்தேன்
நான் எந்த ஒரு போர்க்குற்றத்தையும் செய்யவில்லை. போரை நான் தொடங்கவும் இல்லை. அந்த போரை நான் தான் முடித்து வைத்தேன். இன்று இலங்கையின் அதிபர் யாழ்ப்பாணத்துக்கு சுதந்திரமாக சென்று வர முடிகிறது எனில் இந்த நாட்டை மீட்டெடுத்தது நாங்கள்.
உயிர் பயத்தில் நடுங்கிய கேபி
விடுதலைப் புலிகளுடன் கடைசி நிமிட பேச்சுகள் பயன் தராது என நம்பினேன். கே.பி என்கிற செல்வராசா பத்மநாதனை கொழும்புக்கு கொண்டு வந்த போது அவர் அவ்வளவுதான் கதை என நடுங்கினார். இப்போது மகிழ்ச்சியாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறினார்.