ரணில் பக்கா திருடன்.. பொய்யர்: சாடுவது சாட்சாத் கோத்தபாய ராஜபக்சே
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமங்கே பக்கா திருடன்... மிகப் பெரிய பொய்யர் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை அதொபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்ற உடன் அவரது சகோதரர் கோத்தபாய உள்ளிட்ட குடும்பத்தினர் ஓடிப் பதுங்கி கொண்டனர். அவர்கள் மீது ஏராளமான மோசடி வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டு இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரது பிரசார குழுத் தலைவராக கோத்தபாய களமிறக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்சேவை ஆதரித்து பிரசார கூட்டம் ஒன்றில் கோத்தபாய பேசியதாவது:
தமிழ்நாட்டில் சயனைட் குப்பிகளுடன் விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதனால்தான் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கூறுகிறோம்.
எங்கள் ஆட்சியை திருடர் ஆட்சி எனக் கூறி அரசாங்க அதிகாரிகளை கைது செய்தார்கள். விசாரணைகளை நடத்தினார்கள்.
ஆனால் விசாரணைகளின் முடிவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கே வெறும் திருடன் அல்ல; மிகப்பெரிய திருடன். பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வருகிறவர்..
இவ்வாறு கோத்தபாய சாடியுள்ளார்.