ராஜபக்சே ஆட்சியில் மனித உரிமை மீறல்... வலுவான ஆதாரம் இருப்பதாக இலங்கை அரசு தகவல்
கொழும்பு: ராஜபக்சே மற்றும் அவரது ஆட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறீசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியின் படி, ராஜபக்சேவின் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணைகள் தொடங்கின.
இதற்கென காவல் துறை, ராணுவம், உளவுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் சகோதரும், முன்னாள் நிதியமைச்சருமான பாசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். சில நிதி முறைகேடுகள் தொடர்பாக ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தியிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள இந்த ஆதாரங்களே போதுமானவையாக உள்ளன. இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்" என்றார்.