தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு - பிரதமர் மோடி
தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நுவரெலியா: மலையக மக்கள் கடுமையான உழைப்பாளிகள், தேயிலை உற்பத்தி செய்து வருகின்றனர். தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்பு உண்டு என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புத்தர் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று நுவரெலியாவில் மலையக தமிழர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் புகழாரம் சூட்டினார்.
புத்தரின் கொள்ளைகள்
புத்தரின் கொள்கைகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை. புத்த மதத்தில் இருந்து இந்தியா நிர்வாகம், கலாசார கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய பேரரசர் அசோகரின் மகனும், மகளும் இலங்கைக்கு சென்று புத்த மதத்தை பரப்பினர்.
இந்திய இலங்கை உறவு
புத்த மதத்தின் முக்கிய அடையாளமாக இலங்கை திகழ்ந்து வருகிறது. புத்தரின் ஞானத்தை இந்தியாவுக்கு பரப்பும் நிலையில் இலங்கை தற்போது உள்ளது என மோடி கூறியுள்ளார். இந்தியா-இலங்கை இடையே உறவை வலுப்படுத்தும் திருநாளாக புத்த பூர்ணிமா திகழ்கிறது.
வர்த்தக தொடர்பு
வர்த்தகத்துறையில் இந்தியாவும் இலங்கையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. புத்தர் காட்டிய வழி நம் அனைவருக்கும் இப்போதும் பொருத்தமாக உள்ளது. இந்தியாவும் இலங்கையும் ஒருவருக்கு ஒருவர் பல்வேறு துறைகளில் சார்ந்து இருக்கிறது.
தேயிலையுடன் தொடர்பு
தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்ப்பு உள்ளது. தேநீர் சுறுசுறுப்பை தரும். கடும் உழைப்பாளிகள் அதிகம் விரும்புவது தேநீர்தான். இந்தியாவில்
'சாய் பீ சர்ச்சா' பிரபலமடைந்துள்ளது.
கடின உழைப்பாளிகள்
மலையக மக்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை பேசுகின்றனர். செம்மொழியான தமிழ்மொழி பேசுவதோடு, இலங்கையின் சிங்களத்தையும் கற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை மலையக மக்களுடனான உறவு என்றைக்கும் நீடிக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டீ வியாபாரம்
சிறிய அளவில் டீ வியாபாரியாக இருந்து இந்திய நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ள மோடி, இலங்கையில் மலையக தமிழர்கள் மத்தியில் பேசிய போதும் பழைய நினைவில் தனக்கும் தேயிலைக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்பு உள்ளது என்று பேசியுள்ளார்.