நான் இலங்கையில்தான் இருக்கிறேன், தப்பி ஓடவில்லை - கே.பி.
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவராக, பிரபாகரனின் நிழலாக வலம் வந்தவரான கே.பி. என்கிற குமரன் பத்மநாபன் தான் தொடர்ந்து கிளிநொச்சியில்தான் தங்கி இருப்பதாகவும், தான் இலங்கையை விட்டு வெளியேறவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக ராஜபக்சே தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கே.பி. தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதை அவர் தற்போது மறுத்துள்ளார்.
2009ல் விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் இலங்கைப் படைகள் வென்ற சில மாதங்களில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார் கே.பி. அவரை இலங்கைக்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணையில் ஈடுபடுத்தியது இலங்கை அரசு. அதன் பின்னர் அவர் இலங்கை அரசுத் தரப்புக்கு ஆதரவாக மாறினார்.
இதையடுத்து ராணுவப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் அவர் நடமாட அனுமதிக்கப்பட்டார். கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் போராளிகளின் பிள்ளைகளைப் பராமரிக்கும் சேவையில் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வீழ்த்தப்பட்டதால் கே.பி., கருணா போன்றோரின் நிலை கேள்விக்குறியானது. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதை கே.பி. மறுத்துள்ளார்.
கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக 2 ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தி வருகிறார் கே.பி. இதற்கான நிதியை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களிடம் இருந்து பெற முந்தைய இலங்கை அரசு அனுமதித்துள்ளது.
கிளிநொச்சியில் உள்ள அவரது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு போன் மூலம் பேட்டியளித்துள்ளார் கே.பி. அவர் கூறுகையில்,
நான் இலங்கையில்தான் இருக்கிறேன். வேறு எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் எனக்கு வழங்கப்படும் ராணுவ பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஆற்றி வரும் மனித நேய பணிகளை தொடர்வதற்கு புதிய அரசு அனுமதித்தால் இறைவனுக்கு நன்றி சொல்வேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் நடவடிக்கைகள் எனக்கு எதிராக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார் கே.பி.
பணம், நகை குறித்து கே.பியை விசாரிப்போம் - சமரவீரா
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் பணம், நகை குறித்து கே.பியிடம் விசாரிக்கப் போவதாக புதிய அரசு கூறியுள்ளது. அந்த அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மங்கள சமரவீரா இதுகுறித்துக் கூறுகையில், ராஜபக்சே அரசுடன் குமரன் பத்மநாபன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம் குறித்தும், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், பணம் ஆகியவை எங்கே போனது என்பது பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இதனால் கே.பி.க்கு மீண்டும் ஒரு சோதனைக் காலம் ஆரம்பித்துள்ளது.