என் அனுமதி இல்லாமல் மகிந்த ராஜபக்சேவுக்கு போட்டியிட சீட் .. அதிபர் சிறிசேன புது குண்டு
கொழும்பு: இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் தேர்தலைப் போலவே நாடாளுமன்ற தேர்தலிலும் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைவது உறுதி; அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தம்மை ஆளும் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே முயற்சி செய்தார்.
ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிடவே சீட் கொடுக்கமாட்டோம் என்று முதலில் சுதந்திர கட்சி அறிவித்தது. பின்னர் குருநாகல் மாவட்டத்தில் ராஜபக்சே போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு சுதந்திர கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராஜபக்சே மீண்டும் அரசியலில் தலை எடுப்பதை விரும்பாத சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த நிலையில் அதிபர் சிறிசேன, தமது அனுமதியில்லாமல் மகிந்த ராஜபக்சேவுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது.
அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது; அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைப் போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றுவிடுவார் என்று கூறியுள்ளார்.
இது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.