இந்தியாவிலும் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்: திருமாவளவன்
கொழும்பு: ஐரோப்பிய யூனியனை போல இந்தியாவும், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரியுள்ளார் தொல்.திருமாவளவன்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் தெரிவித்ததாவது:
ஐரோப்பிய நாடுகள் ஒன்றியம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியதை பின்பற்றி பிற நாடுகளும் தடையை விலக்க வேண்டும். அதிலும், குறிப்பாக இந்தியா, இந்த முடிவை ஏற்று, இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கிறேன்.
டெசோ அமைப்பில் விடுதலை சிறுத்தைகள் இணைந்து செயல்பட்டபோது, அனைத்து நாட்டு தூதரகங்களிலும் தூதர்களை சந்தித்தபோதெல்லாம், நான் விடுதலை புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வந்தேன்.
விடுதலை புலிகள் இயக்கம் என்பது தேசிய இன விடுதலை இயக்கம், வெகு மக்களுக்கான விடுதலை இயக்கம். அதன்மீது பயங்கரவாத முத்திரை குத்தி, அல்கொய்தாவுக்கு இணையாக பட்டியலிட்டதுதான் மிகப்பெரிய பின்னடைவுக்கு காரணம். இப்போது தமிழ் சமூகத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இனிமேல் தமிழர்களுக்கு இது திருப்புமுனையை அளிக்கும். பிற நாடுகளும் இதை பின்பற்றும் என நம்புகிறேன். இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.