இந்திய கடற்படை தளபதி இலங்கையில் சுற்றுப்பயணம்! தமிழக மீனவர்களுக்கு தீர்வு கிடைக்குமா?
இலங்கையுடன் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் அந்நாட்டிற்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா, கொழும்புவில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் கடற்படை ஒத்துழைப்
கொழும்பு: இலங்கைக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா, அந்நாட்டுடன் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கொழும்புவில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் கடற்படை ஒத்துழைப்பு மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா 5 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை இலங்கைக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, அதிபர் மைத்ரி பாலசிறீசேனா பாதுகாப்புத்துறை தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
அந்நாட்டுத் தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை நடைபெறும் சர்வதேச கடற்படை ஒத்துழைப்பு மாநாட்டிலும் அட்மிரல் சுனில் லம்பா கலந்து கொள்கிறார். இதில் 39 நாடுகளின், 13 சர்வதேச அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் உரை நிகழ்த்தும் இந்திய கடற்படைத் தளபதி சுனில் லம்பா, சர்வதேச ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்திய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக இலங்கை அரசினால் கட்டப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவு இடத்தில் சுனில் லம்பா மலர் வைத்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன்குமார் அந்நாட்டு செயலாளர் கருணசேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதில் பிராந்தியப் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் இடையே கடற்படை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளது.