பிரபாகரனுக்கு மட்டும் இந்தியா உதவியிருந்தால்.... அலறும் இலங்கை அமைச்சர் நவீன் திசநாயக்கே
1987-ல் பிரபாகரனுக்கு மட்டும் இந்தியா உதவியிருந்தால் இலங்கையின் நிலைமை மோசமாகி இருக்கும் என அந்நாட்டு அமைச்சர் நவீன் திசநாயக்கே கூறியுள்ளார்.
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தோற்கடிக்க உதவியதே 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி உருவாக்கிய இந்திய- இலங்கை ஒப்பந்தம்தான் என்று அந்நாட்டின் அமைச்சர் நவீன் திசநாயக்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக நவீன் திசநாயக்கே கூறியுள்ளதாவது:
1987-ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசில் என் தந்தையார் காமினி திசநாயக்க அமைச்சராக இருந்தார்.
இந்த ஒப்பந்தத்தை இலங்கை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த ஒப்பந்தத்தை மட்டும் ஏற்காமல் இருந்திருந்தால் பிரபாகரனை தோற்கடிக்க இலங்கைக்கு எந்த உதவியும் இந்தியா செய்திருக்காது.
1987-ம் ஆண்டுக்குப் பின்னர் பிரபாகரனை தோற்கடிக்கும் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் பிரபாகரனுக்கு மட்டும் இந்தியா உதவியிருந்தால் இலங்கையின் நிலைமை படுமோசமாகியிருக்கும்.
இவ்வாறு நவீன் திசநாயக்கே கூறியுள்ளார்.
இந்தியா- இலங்கை இடையேயான அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாள் ஜூலை 29. இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ராஜீவ் காந்தியை கொழும்பில் நடைபெற்ற முப்படை அணிவகுப்பின் போது இலங்கை கடற்படை வீரர் விஜெமுனி விஜித ரோஹன துப்பாக்கிக் கட்டையால் தாக்கினார் என்பது வரலாறு