இலங்கை: மன்னாரைத் தொடர்ந்து திருகோணமலையிலும் மனித புதைகுழி!!
திருகோணமலை: இலங்கையில் தமிழர் வாழும் மன்னாரில் மனித புதைகுழி காணப்பட்டதைப் போல திருகோணமலையிலும் ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ளது மன்னார். இங்கு பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் சாலையில் அண்மையில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை அப்புதைகுழியில் இருந்து 62 மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழர் வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலும் புதிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் போலவே திருகோணமலையில் உள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேச்சவரம் கோயிலுக்கு செல்லும் சாலையில் இந்த மனித புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த பகுதி தற்போது பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வில் மனித எலும்புகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அப்பகுதியை முழுமையாக அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.