இலங்கையில் சீனாவுக்கு செக் வைக்கிறது ஜப்பான்?
கொழும்பு: இலங்கையை தன்னுடைய மாகாணங்களில் ஒன்று போல கருதி முதலீடு செய்து மேலாதிக்கம் செலுத்தி வரும் சீனாவின் நடவடிக்கைக்கு செக் வைக்கும் வகையில் ஜப்பான் தீவிரம் காட்டி வருகிறது.
1990களுக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஊசலாட்டமானதாக மாறிப் போனது.. இந்த வெற்றிடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சீனா.
வளைகுடா நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல்கள் எந்த ஒரு தடங்கலுமின்றி எளிதாக செல்ல வேண்டும் என்பதற்கான முத்துமாலை திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கியது.
முத்துமாலை திட்டம்
பாகிஸ்தானின் கவதார், வங்கதேசத்தின் சிட்டகாங், மியான்மரின் கியாகுகைபு துறைமுகங்களை மேம்படுத்தி அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்துக் கொண்டது. இந்த வழியில்தான் இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தையும் கைப்பற்றியது சீனா.
சீனாவின் ஆதிக்கம்- ஜப்பான் கவலை
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அண்மையில் ஜப்பான் கவலை தெரிவித்திருந்தது. ஆனால் ஜப்பானின் இந்த கவலை தேவையற்றது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
517 மில்லியன் டாலர் உதவி
தற்போதைய நிலையில் இலங்கைக்கு அதிக நிதி உதவி அளிக்கக் கூடிய நாடாக இருப்பது சீனாதான். கடந்த 2013ஆம் ஆண்டு மண்டும் இலங்கைக்கு 517 மில்லியன் டாலர் நிதி உதவியை சீனா கொடுத்துள்ளது.
ஜப்பான் 497 மில்லியன் டாலர்
அதே நேரத்தில் ஜப்பான் 497 மில்லியன் டாலரை நிதி உதவியாக இலங்கைக்குக் கொடுத்துள்ளது.
சீனாவின் அனுசரணையில் தப்பிக்கும் இலங்கை
மனித உரிமை மீறல்களில் ஐக்கிய நாடுகள் சபையால் கண்டிக்கப்படும் நாடாக இலங்கை இருக்கிறது. அதே நேரத்தில் சீனாவின் அனுசரணையால் இலங்கைக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவும் இல்லை.
ஜப்பான் பிரதமர் இலங்கை பயணம்
இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் அபே அடுத்த மாதம் இலங்கைக்கு செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது சீனாவின் மேலாதிக்கத்தை வெளிப்படையாகவே ஜப்பான் பிரதமர் கண்டிக்க வாய்ப்பிருக்கிறது.
சீனாவின் இடத்தில் ஜப்பான்
அத்துடன் சீனாவின் இடத்தில் ஜப்பான் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஆசிய நாடுகளுக்கான ஒரு இடம் 2015 ஆம் ஆண்டு காலியாகிறது. அந்த இடத்தில் அமர்ந்து கொள்ள ஜப்பான் முயற்சிக்கிறது.
வங்கதேசத்தை ஓரம்கட்டுதல்
அதே நேரத்தில் வங்கதேசமும் இதற்கான முனைப்புகளை காட்டுகிறது. ஆனால் வங்கதேசத்தின் முயற்சிகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பிடிப்பது என்ற கங்கணத்தோடு ஜப்பான் களம் இறங்கியிருக்கிறது.
இலங்கைக்கு ஆதரவாக ஜப்பான்
அப்படி ஐ.நா. சபையில் முக்கிய இடத்தில் ஜப்பான் அமரும் போது நிச்சயம் அது இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனை முன்வைத்து சீனாவை இலங்கை தீவில் கட்டுப்படுத்த நினைகிறது ஜப்பான்.
முத்துமாலை திட்டத்துக்கு செக்
சீனாவை இலங்கைத் தீவில் கட்டுப்படுத்தினால் அதன் கனவு திட்டமான முத்துமாலைத் திட்டத்தை உடைத்தது போலாகி செக் வைத்து விடலாம் என்பதும் ஜப்பானின் வியூகம்.
என்ன செய்யப் போகுமா?
ஜப்பானின் வியூகத்துக்கு இலங்கை இணங்குமா? சீனாவுக்கு அஞ்சி ஜப்பானிடம் இருந்து இலங்கை விலகுமா? என்பதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும்.