நிதி மோசடி வழக்கு: கருணாவை கைது செய்தது இலங்கை போலீஸ்!
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கருணாவை இலங்கை போலீஸ் கைது செய்துள்ளது.
கொழும்பு: நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்தனர்.
இலங்கையில் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசு அமைந்தது முதலே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரின் நிதி மோசடிகள் பலவும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த கருணா, அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் நிதி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் தமிழ் எம்பியான நடராஜா ரவிராஜை கருணா உத்தரவினால்தான் சுட்டுக் கொலை செய்ததாக அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று காலை கருணாவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
விரைவில் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கிலும் கருணா கைது செய்யப்படக் கூடும் என இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையிலடைப்பு
இதனிடையே கைது செய்யப்பட்ட கருணாவை டிசம்பர் 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.