பிரபாகரனுக்கு துரோகம் செய்த எனக்கு அடைக்கலம் தந்தது இந்தியா... கருணா ஒப்புதல் வாக்குமூலம்
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்த கால கட்டத்தில் இந்தியாவில் தாம் இருந்தேன் என கருணா கூறியுள்ளார்.
மட்டக்களப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்துவிட்டு சிங்களவருடன் கைகோர்த்த கருணாவுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுத்தது என தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் கருணாவே ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தலையொட்டி தமிழர்களின் தாயக பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா பங்கேற்றார்.
கருணா தமது பிரசாரத்தின் போது, 2008-ம் ஆண்டு தாம் இந்தியாவில் இருந்ததாகவும் கிழக்கு மாகாண தேர்தலை நடத்தப் போவதாக கூறி ராஜபக்சே தம்மை அழைத்ததாகவும் கூறினார். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிங்களவருக்கு காட்டி கொடுத்த கருணா, பிரபாகரனுக்கு அஞ்சி இந்தியாவில் பதுங்கி இருந்திருக்கிறார்.
அப்போதைய காங்கிரஸ் அரசுதான் கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இதனை தற்போது கருணாவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்துள்ளார்.