நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்களே... இலங்கை தேர்தலில் ஓரம்கட்டப்பட்ட கருணா புலம்பல்
கொழும்பு: நியமன எம்.பி. பதவி தருவதாகக் கூறி ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சி தம்மை ஏமாற்றிவிட்டதாக கருணா புலம்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகம் செய்துவிட்டு இலங்கை அரசு பக்கம் சாய்ந்த கருணாவுக்கு மகிந்த ராஜபக்சே அமைச்சர் பதவி வழங்கி இருந்தார். ஆனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கருணாவுக்கு தற்போது போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நியமன எம்.பி.யாகவும் அவர் நியமிக்கப்படவும் இல்லை. இதனால் கருணா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கருணா கூறியுள்ளதாவது:
சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் என்னை நியமன எம்.பி.யாக்குவதற்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் நியமன எம்.பி.க்களில் பட்டியலில் இடம்பெறாமல் போனது வருத்தமளிக்கிறது.
விடுதலைப் புலிகளுடனான போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும் உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.
அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இவ்வாறு கருணா கூறியுள்ளார்.
600 பேரை அனுப்பினார் கருணா?
2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இலங்கை ராணுவத்தின் இறுதிப் போரில் கருணா தமது ஆதரவாளர்கள் 600 பேரை சிங்கள ராணுவத்துடன் இணைந்து போரிட அனுப்பியதாகவும் அவர்களில் 300 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் அந்த ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறி இலங்கை அமைச்சரான பின்னர் அவரிடம் 600 பேர் இருந்தார்களா? என்ற கேள்வியையும் இலங்கை ஊடக வட்டாரங்கள் எழுப்பியுள்ளன.