இலங்கை அரசியலையே புரட்டிப் போடும் 'மந்திரம்' என்னிடம் இருக்கு... ராஜபக்சேவை மிரட்டும் கருணா
கொழும்பு: இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலையே புரட்டிப் போடுகிற ரகசியங்கள் தம்மிடம் இருப்பதாக மகிந்த ராஜபக்சேவை கருணா மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகம் செய்து மகிந்த ராஜபக்சேவுடன் கை கோர்த்தவர் கருணா. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கருணா போட்டியிட வாய்ப்பு தரவில்லை. நியமன எம்.பி.யாகவும் நியமிக்கவில்லை.
அதே நேரத்தில் கருணாவுக்கு கீழிருந்த பிள்ளையானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் கால ரகசியங்களை அம்பலப்படுத்துகிற முயற்சியில் இறங்கியுள்ளார் கருணா.
இது தொடர்பாக கருணா கூறியுள்ளதாவது:
எனக்கு நியமன எம்.பி. பதவி தருவதாக கூறி என் காலை வாரிவிட்டனர்.. ஆனால் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை.
பிரபாகரன் உயிரோடு இருக்கும்போதே அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தை திறந்தேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கவச வாகன பாதுகாப்பில் அழைத்துச் சென்று கட்சி அலுவலகத்தை திறந்தேன்.
ஆனால் என்னை நியமன எம்.பி.யாக நியமிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எழுந்து நடக்க முடியாத, கீழே விழப்போகும் நபர்க ளுக்கும், பட்டியலில் இடம்தரப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்ற போது நான் இலங்கையை விட்டு ஓடவுமில்லை. கட்சியை விட்டு விலகவுமில்லை. கட்சியின் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் எனக்கு தெரியாமல் கட்சிக்குள் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியைத்தான் சந்திப்பார்.
இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று உழைத்தவன் நான்.
என்னால் இலங்கையில் அரசியலை திருப்பிப்போடவும் முடியும். அதற்கான மந்திரமும் என்னிடம் தான் இருக்கிறது.
இவ்வாறு கருணா கூறியுள்ளார்.