கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்ல ஆண்டுவிழா... மாணவிகள் உற்சாக நடனம்
யாழ்பாணம்: கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு விழா, நடனம், நாடகம் என உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டு விழாவில் தேசியகொடியினை திரு.T.விஸ்வரூபன் அவர்களும், செஞ்சோலை கொடியினை செல்வி.நிரோசா அவர்களும், NERDO கொடியினை திரு.செ.பத்மநாதன் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் இல்லத்தின் கலையரங்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து செஞ்சோலை, பாரதி, அன்பு இல்ல சிறார்களாலும், பெற்றோர்கள், ஆசிரியர்களாலும் கலையரங்கம் நிறைந்தது.
கலையரங்கத்தில் செஞ்சோலை சிறுமிகளான இசைச்செல்வி, தாட்சாயினி நிகழ்வுகளை அழகாக தொகுத்து வழங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் விருந்தினர்கள் மங்கல விளக்கை ஏற்றினார்கள். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர், இல்ல சிறுமிகளான ஜெஸ்மிரா, அகிலநாயகி, டிலக்சிறி, குமுதகலா ஆகியோரால் செஞ்சோலை இல்லத்தின் கீதம் பாடப்பட்டது. அடுத்து சிறுமி ஜெஸ்மிராவால் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
சிறுமியர் நடனம்
தொடர்ந்து செஞ்சோலை இல்ல சிறுமி தவரஞ்சினி வரவேற்புரையை வழங்கினார். அடுத்து செஞ்சோலை இல்ல சிறுமிகளால் பாடலுக்கேற்ற அபிநயத்துடன் மிக நேர்த்தியாக வரவேற்பு நடனம் இடம்பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தொடர்ந்து ஆசியுரையை அருட்தந்தை யூட் அமலதாஸ் வழங்கினார். இல்ல சிறார்கள் கடவுளின் ஆசியுடன் மேன்மேலும் வளர வாழ்த்தியதுடன் இவ்வாறான நற்பணியை ஆற்றி செல்லும் இல்ல தந்தையான திரு.பத்மநாதன் அவர்களை பாராட்டியதுடன், இல்ல நிர்வாகிகளையும் பாராட்டி வாழ்த்தினார்.
குழந்தைகள் மகிழ்ச்சி
அடுத்து இல்ல தந்தையான திரு.செ.பத்மநாதன் சிறப்புரையாற்றினார். இல்லம் வரும் மாணவர்கள் ஏதாவது ஒரு மன அழுத்தத்தில் வருகிறார்கள் அவர்களிடம் முதலில் நம்பிக்கையையை ஏற்படுத்தி அவர்களை சிரிக்கவைப்பது பெரும்பாடாக அமைந்துவிடுகிறது. ஆனால் இதில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். பிள்ளைகள் இங்கு மிக மகிழ்சியாக உள்ளனர் என கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
குமுதன் கவிதை
அடுத்து எல்லோராலும் குமுதன் மாமா என அன்பாக அழைக்கப்படும் குமுதன் அவர்களின் வாழ்த்துக் கவிதை இடம்பெற்றது. அவையடக்கத்துடன் ஆரம்பமான இக்கவிதை வரிகள் தமிழை வாரி இறைத்து கலையரங்கத்தை அமைதிகொள்ளவைத்து, எல்லோர் மனங்களிலும் உட்கார்ந்து கொண்டது. சிறுவர்களே இங்கு எல்லாம் உங்களுக்கானதே படியுங்கள்... என்ற தொனிப்பட கவிதை வரிகள் அமைந்திருந்தன.
அபிநய நடனம்
தொடர்ந்து செஞ்சோலை இல்ல சிறுமிகளின் பாடலுக்கேற்ற அபிநய நடனம் இடம்பெற்றது. அடுத்து சிறுமி கிஸாந்தினி அவர்களின் கவிதை இடம்பெற்றது. தொடர்ந்து செஞ்சோலை இல்ல சிறுமிகள் பாடலுக்கு நடனம் ஆடினர். நடனம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தொடர்ந்து அன்பு இல்ல சிறுவர்களின் பின்னணி இசையுடனான கராத்தே நிகழ்வு இடம்பெற்றது. துடிப்பான இந்நிகழ்வை மிக நேர்த்தியாக சிறுவர்கள் வழங்கி பாராட்டை பெற்றனர். அடுத்து பாரதி இல்ல சிறுமிகளின் அபிநயநடனம் இடம்பெற்றது.
சிறுவர்கள் நாடகம்
அடுத்து செஞ்சோலை ஆண் சிறுவர்களின் நாடகம் இடம்பெற்றது. சிறுவர்களாக இருந்தபோதும் நகைச்சுவையுடனும், கருத்தொன்றை வெளிப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்துடனும் இவர்கள் நாடகத்தை வழங்கிய விதம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.
அடுத்து செஞ்சோலை இல்ல சிறுமி இசைச்செல்வியின் பின்னணி இசையுடனான பாடல் அனைவரையும் கவர்ந்து கரையரங்கத்தை ரசிக்கவைத்தது. மின்சாரம் தடைப்பட்டு பின்னணி இசை மீள ஆரம்பத்திலிருந்து வந்துபோது சிறுமி பாடலை மீண்டும் பாடியபோது அவை அமைதியுடன் ரசித்தது.
தொடர்ந்து செஞ்சோலை உயர்தர மாணவிகளின் "மாற்றம் வருமா?" என்ற நாடகம் அவசரமில்லாத நேர்த்தியான பாங்குடன் ஏழ்மையிலும் கல்வி என்ற கருத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, சிறுவர் இல்லத்தின் தேவையையும் உணர்த்தி நின்றது.
சங்கீதப்பாடல்
தொடர்ந்து சிறுவர்களின் சங்கீதப்பாடல் ரசிக்கும்படி அமைந்திருந்தது. தொடர்ந்து விருந்தினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, திரு.ப.ஸ்ரீதரன் (அதிபர் - கிளி/திருவையாறு மகா வித்தியாலயம்), திருமதி.ஜெ.தனபாலசிங்கம் (அதிபர் -கிளி/மகா வித்தியாலயம்) ஆகியோர் சிறுவர்களுக்கு நற்கருத்துக்களை கூறி சிற்றுரை ஆற்றினர். மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற சகல வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் இல்ல தந்தையும், செஞ்சோலை குடும்பமும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.