போருக்கு நடுவே படித்து 2 கண்டுபிடிப்புகள்... ரூ200 கோடிக்கு காப்பிரைட்ஸ் விற்ற கிளிநொச்சி 'விஞ்ஞானி'
கிளிநொச்சி: போருக்கு மத்தியில் படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை ரூ200 கோடிக்கு விற்பனை செய்து சாதித்திருக்கிறார் இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த விஞ்ஞானி ஜாக்சன்.
கிளிநொச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாக்சன், 1997-ம் ஆண்டு வரை கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் படித்தார். பின்னர் வவுனியா வீரபுரம் மாணிக்கவாசம் வித்தியாலத்தில் கல்வி கற்றார்.
ஜாக்சனின் தந்தை காலமாகிவிட்டார். ஆசிரியையாகப் பணியாற்றும் அவரது தாயார்தான் ஜாக்சனுக்கு ஆதரவாக இருந்தார். தற்போது 31 வயதாகும் ஜாக்சன், 2 புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
இதில் ஒன்று மாற்றுத் திறனாளிகளுக்காக மட்டுமேயான கழிப்பறை கட்டும் தொழில்நுட்பம்; மற்றொன்று மின்சாரம் இல்லாமல் நீரிறைக்கும் இயந்திரத்தை இயக்கும் தொழில்நுட்பம். தற்போது இந்த 2 கண்டுபிடிப்புகளும் இலங்கை மதிப்பில் ரூ200 கோடி அளவுக்கு காப்புரிமைக்கு விற்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை தொழில்நுட்ப காப்புரிமை மும்பையைச் சேர்ந்த நிறுவனத்துக்கும், மின்சாரம் இல்லாமல் நீரிறைக்கும் இயந்திரத்துக்கான தொழில்நுட்ப காப்புரிமையை ஈஸ்ட் ஈகிள் புராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கும் ஜாக்சன் விற்பனை செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தாகி இருக்கிறது.