கே.பி. இலங்கையை விட்டு வெளியேறினாரா?
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாபா என்ற கே.பி. இலங்கையை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் கே.பி. கிளிநொச்சியில்தான் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்ற நிலையில் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து கருணா உட்பட மூன்று முக்கிய பிரமுகர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓட இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கே.பி. இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாகஎம்.பி. ராஜித சேனரத்ன கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும் கிளிநொச்சியில் உள்ள பாரதி, செஞ்சோலை இல்லங்களைத் தொடர்ந்து கே.பி. பராமரித்து வருவதாகவும் கிளிநொச்சியிலேயே அவர் தங்கியிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.