ஜெ. சசியை கொச்சையாக திட்டிய நபர்... விடப்போவதில்லை என வரிந்து கட்டும் கிருஷ்ணப்ரியா!
ஜெயலலிதா, சசிகலாவை கொச்சையாக திட்டி கருத்து போட்ட ஒரு நபர் மீது இளவரசியின் மகள் கிருண்ணப்ரியா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் இழிவுபடுத்துகிறார்கள், இந்த மாதிரியான ஜந்துக்களை மக்கள்முன் அடையாளம் காட்டி சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஜெயலலிதா, சசிகலா பற்றி கொச்சையான கருத்தை வெளியிட்ட அந்த நபரை கண்டித்து கிருஷ்ணப்ரியா தனது முகநூல் பக்கத்தில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
இளவரசியின் மகளும், சசிகலாவின் அண்ணன் மகளுமான கிருஷ்ணப்ரியா அண்மைக் காலமாக முகநூலிலும் அரசியல், பொது மேடைகளிலும் தன்னுடைய கருத்துகளை ஆழப் பதிய வைத்து வருகிறார். தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதாவின் வீடியோ வெளியிட்டது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியதாக கூறியதோடு, தினகரனிடம் கொடுத்த வீடியோ எப்படி வெற்றிவேலிடம் சென்றது என்று விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு அடுத்த நாளில் தினகரனிடம் அந்த வீடியோவை கொடுத்தது விவேக் தான். வெற்றிவேல் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்து தினகரனுடன் எதிர்ப்பு மனப்பாங்கை கடைபிடித்து வந்த கிருஷ்ணப்ரியா ஆர்கே நகர் தேர்தலில் தினகரனுக்கு கிடைத்த வெற்றியானது சசிகலாவிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
கொச்சையாக திட்டிய நபர்
தொடர்ந்து தன்னை சசிகலாவின் அபிமானியாக காட்டி வரும் கிருஷ்ணப்ரியா சசிகலா, ஜெயலலிதா குறித்து முகநூலில் கொச்சையாக கருத்து பதிவிட்டுள்ளவரின் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார். சசிகலா, ஜெயலலிதா மட்டுமின்றி கிருஷ்ணப்ரியாவையும் அந்த நபர் வசைபாடி தீர்த்துள்ளார்.
அடையாளம் காட்டுவேன்
இந்தப் பதிவை போட்டு கிருஷ்ணப்ரியா, இவர் யார் என்று எமக்கு தெரியாது. ஆனால் பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் எவ்வாறு இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதற்க்கு இப்பதிவு ஒரு சான்று. பெண்கள் தயக்கம் களைந்து இம்மாதிரியான ஜந்துக்களை மக்கள்முன் அடையாளம் காட்டி ,சட்டப்படி தண்டனை பெற்றுத்தர முன்வர வேண்டும். விடுவதாக இல்லை நான். " நமக்காக நாம் முன்வர வேண்டும் " என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
விடப்போவதில்லை
கிருஷ்ணப்ரியாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாக கருத்து போட்டுள்ளனர். சிலர் இதை பொருட்படுத்த வேண்டாம் என்று கருத்து போட லேசில் விடப்போவது கிடையாது, சைபர் கிரைமில் புகார் அளிக்கப் போவதாக கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார்.
குவியும் ஆதரவுக் கருத்துகள்
இதே போன்று பலரும் அந்த நபரை தாங்களே பிடித்து அடையாளம் காட்டுவதாக கிருஷ்ணப்ரியாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர். இது போன்ற நபர்களை பொதுமக்கள் மத்தியில் அடையாளம் கண்டு அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்றும் கிருஷ்ணப்ரியாவின் முகநூல் பக்கத்தில் பலரும் கருத்து போட்டு வருகின்றனர்.