ஆயுத கடத்தல் விவகாரம்: ராஜபக்சே மருமகன் 'டீ கடை' உதயங்க தப்பி ஓடி தலைமறைவு!!
கொழும்பு: உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்காக ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ரஷ்யாவுக்கான இலங்கை தூதரும் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மருமகனுமாகிய "டீ கடை" உதயங்க வீரதுங்க தப்பி ஓடி வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகி இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உதயங்க வீரதுங்க சிறிது காலம் டீ கடை நடத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அதனை ஹோட்டலாக விரிவுபடுத்தியிருக்கிறார். இந்நிலையில் இலங்கை ராஜபக்சே அதிபராக இந்த 'டீ கடை' உதயங்காவையே ரஷ்யாவுக்கான இலங்கை தூதர் பதவியில் அமரவைத்தும் விட்டார்.
அத்துடன் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு இடைத்தரகராகவும் உதயங்க வீரதுங்கவை பயன்படுத்தியிருக்கிறார் ராஜபக்சே. இப்படி ஆயுத இடைத்தரகராக உருவெடுத்த உதயதுங்க 'சைடு பிசினஸாக' ஆயுதக் கடத்தல் தொழிலையும் செய்து வந்துள்ளார்.
உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த போதும் கள்ளச் சந்தையில் மலிவான விலையில் உதயங்க வீரதுங்கவும் அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வந்திருக்கிறார். இதனை நீண்டகாலமாக உக்ரைன் அரசு கவனித்து வந்திருக்கிறது.
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் அதிரடியாக உதயங்க வீரதுங்க மீது உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக புகார் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் ராஜபக்சே ஆட்சிக் கால ஆயுத இறக்குமதியில் ஊழல் நடந்திருப்பதை இலங்கை அரசும் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் ராஜபக்சே அதிகாரத்தைப் பறிகொடுத்தவுடன் தலைமறைவான உதயங்க வீரதுங்க இதுநாள் வரை எங்கே பதுங்கி இருக்கிறார் என்பது தெரியவில்லை. அனேகமாக உதயங்கவுக்கு எதிராக விரைவில் இண்டர்போல் நோட்டீஸை இலங்கை அரசு வெளியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.