தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை- பிள்ளையான் கூட்டாளியான ராணுவ புலனாய்வு அதிகாரி கைது
மட்டக்களப்பு: இலங்கை தமிழ் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கருணாவின் வலதுகரமான பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளியான ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மட்டக்களப்பில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி நள்ளிரவில் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மாமனிதர் என்ற கவுரவத்தையும் வழங்கி சிறப்பித்தனர்.
அவரது படுகொலையில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த கருணா, அவரது கூட்டாளியான கிழக்கு மாகாண முதல்வராக இருந்த பிள்ளையான் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவால் அவர் தப்பித்து வந்தார்.
இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளைத் தொடர்ந்து தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசு வேறுவழியில்லாமல் கருணாவை விட்டுவிட்டு பிள்ளையானை கைது செய்துள்ளது. மேலும் பிள்ளையானின் கூட்டாளியான ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரையும் தற்போது இலங்கை அரசு கைது செய்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.