அடுத்தடுத்து அம்பலமானாதால் ஆத்திரம்.. புலிகளுக்கு எதிராக 'படம் காட்ட'த் தயாராகும் இலங்கை!
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அவசரம் அவசரமாக தனது நாட்டு ராணுவம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை எல்லாம் சரியே என்று சப்பைக் கட்டுக் கட்டும் வகையில், 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளதாம்.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது பல ஆயிரம் தமிழர்களை மிகக் குறுகிய பகுதிக்குள் முடக்கி கொத்து வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து குவித்தது சிங்கள ராணுவம்.
பல நாடுகளின் துணையுடன் நடத்தப்பட்ட இந்த இறுதிப் போரின்போது தமிழர்களை உயிருடன் பிடித்தும் கொடூரமாக சித்திரவதை செய்தும், உயிருடன் தலையில் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து வெறியாட்டம் போட்டது சிங்கள ராணுவம்.
இறுதிப் போரின்போது மட்டும், 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா.வும் குற்றம் சாட்டியது. மேலும், இலங்கைக்கு வந்திருந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் அதிரடியாக சந்தித்து அவர்களிடம் பேசினார். அதன் பின்னர் அவர் கூறுகையில், மிகவும் கொடூரமாக இருக்கிறது தமிழர்களின் நிலை என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கொழும்பு வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று நேரில் பார்வையிட்டார். இது குறித்த அறிக்கையை மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவர் சமர்ப்பிக்கிறார். இதில் இலங்கைக்கு எதிராக மேலும் சில தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இங்கிலாந்தின் சானல் 4 நிறுவனம் அடுத்தடுத்து சிங்கள ராணுவத்தின் இனவெறி முகத்தை தனது ஆவணப்படங்கள் மூலம் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. விடுதலைப் புலி வீரர்களை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் அநியாயமாக கொல்லப்பட்டது, இசைப் பிரியாவின் கொடூர பாலியல் பலாத்கார கொலை உள்ளிட்டவை அம்பலமாகி இலங்கையின் குரூரத்தை உலகத்திற்கு அம்பலப்படுத்தியது.
இப்படி, உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு ஆளாகிவரும், இலங்கை இப்பிரச்னையை சமாளிக்க ராஜதந்திரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவன் வணிகசூரிய கூறுகையில், ராணுவம் தாயரித்துள்ள 8 வீடியோ ஆவணப்படங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கும், ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த வீடியோ ஆதாரங்கள் பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும். இதில் விடுதலைப் புலிகள் செய்துள்ள அநேக குற்றங்கள் பற்றி உலகம் தெரிந்துகொள்ளும் என்றார்.
ஏற்கனவே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் வெற்றிபெற்றன என்பது நினைவிருக்கலாம். இந்த இரண்டு தீர்மானங்களின்போதும் இந்திய அரசும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சாதகமாக நடக்க முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.