பாகிஸ்தான் போகிறார் சிறிசேன.. 3 நாள் விசிட்!
கொழும்பு: இலங்கை அதிபரான பின்னர் முதல் பயணமாக இந்தியாவுக்கு வந்து போன மைத்ரிபால சிறிசேன, அடுத்து பாகிஸ்தானுக்கு நாளை கிளம்பிச் செல்கிறார். அங்கு 3 நாள் அவர் பயணம் செய்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன், அந்தந்த நாட்டுக்கு ஏற்றபடி உறவு வைத்துள்ளது இலங்கை. இந்த நாட்டின் அதிபராக ராஜபக்சே இருந்தவரை சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜபக்சே வீழ்த்தப்பட்டு மைத்ரிபால தேர்தலில் வென்று புதிய அதிபரானார்.
அவர் அதிபர் பதவிக்கு வந்த பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அடுத்து நாளை பாகிஸ்தான் செல்கிறார். அங்கு 3 நாள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்குச் செல்கிறார் சிறிசேன. 5ம் தேதி பாகிஸ்தான் செல்லும் அவர் 7ம் தேதி வரை அங்கிருப்பார். முதலில் நாளை இஸ்லாமாபாத் சென்று அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் இந்த பயணத்தின்போது கையெழுத்தாகவுள்ளன.