பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் தந்த தகவலால் சுப. தமிழ்ச்செல்வன் படுகொலை: விக்கிலீக்ஸ் திடுக் தகவல்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த சுப .தமிழ்ச்செல்வனின் இருப்பிடம் மீது இலங்கை ராணுவம் துல்லியமாக குண்டு வீசி படுகொலை செய்ததற்கு அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொடுத்த தகவல்களே காரணம் என்ற திடுக்கிடும் தகவல் சிஐஏ அறிக்கையில் இடம்பெற்றிருப்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் போராளி இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பிரதானமான இலக்குகள் எப்படியெல்லாம் தகர்க்கப்பட்டன என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. ரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்தது. சி.ஐ.ஏ.-வின் அந்த ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, கொலம்பியா, ஈராக், இஸ்ரேல், பெரு, வடஅயர்லாந்தில், இலங்கை என அரசுக்கு எதிராக போராளிக் குழுக்களின் கிளர்ச்சிகள் நடைபெற்ற நாடுகளில் ராணுவத் தரப்பு எப்படி எதிரிகளின் முதன்மையான இலக்குகளை குறிவைத்தன என்பதை விவரிக்கும் சி.ஐ.ஏ.வின் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7-ந் தேதியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
1972 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்கு சுயாட்சி கோரி வருகிறது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களவர் ஆதிக்கத்துக்கு எதிராக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று போராடுகிற வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த இயக்கத்தை உருவாக்கினார்.
உலகத்திலேயே மிகக் கொடூரமான இனவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் உருவானது. இலங்கை அரசுடனான யுத்தம் நிறுத்தப்பட்டு 2002ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த காலத்தை விடுதலைப் புலிகள் ஆயுதக் குவிப்பு, பயிற்சிக்கு பயன்படுத்திக் கொண்டனர். 2004 ஆம் ஆண்டு மீண்டும் மோதலை தொடங்கினர்.
இதற்கு பதிலடியாக தமக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், 2007 நவம்பர் முதல் 2008ஆம் ஆண்டு ஜனவரி வரை பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலி தளபதிகளின் பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளைக் கொண்டு இலங்கை விமானப் படை தாக்குதல் நடத்தியது.
பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் ஒருவர் கொடுத்த தகவலை வைத்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு செய்தித் தொடர்பாளராக இருந்த (அரசியல் பிரிவு தலைவராக இருந்தார் என்பதே சரி) சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் இதர விடுதலைப் புலி தளபதிகள் மீது துல்லியமாக இலக்கு வைத்து இலங்கை ராணுவம் குண்டுவீசி படுகொலை செய்தது.
2009ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்ற மரபுவழிப் போரின் போது பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகிய கருணாவுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் இலங்கை அரசு குறிப்பிடத்தக்க அளவு ஆதாயம் அடைந்தது.
இவ்வாறு சி.ஐ.ஏ. அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.