இலங்கையில் நல்லாட்சிக்கு மக்கள் அனுமதி கிடைத்துள்ளது: ரணில் மகிழ்ச்சி
கொழும்பு: இலங்கையில் நல்லாட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சம அளவிலான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இருப்பினும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்து வருகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. இந்த இரு பிரதான கட்சிகளும் தற்போதைய நிலவரப்படி தலா 61 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. அதே நேரத்தில் 3வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜே.வி.பி. 2; டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.1 இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
என்னதான் ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணி காட்டினாலும் பிரதமர் யார் என்பதை அதிபர் மைத்ரிபால சிறிசேனவே தீர்மானிப்பார்; அவர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவை நியமிக்கப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி முகத்தை எட்டிப் பார்க்கும் நிலையில் அவர் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்த மக்களின் அனுமதி கிடைத்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றோர், தோல்வி அடைந்தோர் என பிரித்துப் பார்ப்பது தேவையற்றது; ஒரு தாய்மக்களாக இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் என்று ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.