இலங்கை ராணுவ தடைகளை மீறி ஈழத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்!
இலங்கையின் ராணுவ தடைகளை ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது.
திருகோணமலை: இலங்கை ராணுவத்தின் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் தமிழீழ விடுதலைக்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்கள் நாள் கடைபிடிக்கப்பட்டது.
தமிழீழ தனிநாட்டு விடுதலைக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழு வீச்சில் இயங்கிய போது அதன் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றுவார்.
அவரது மாவீரர் நாள் உரை சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆராயப்படும். பிரபாகரனின் உரைக்குப் பின்னர் மணியோசை ஒலிக்க மாவீரர்களின் நினைவிடங்களிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஏற்பாடுகள் செய்துள்ள இடங்களிலும் தியாகச் சுடரேற்றப்பட்டு உயிரைத் தியாகம் செய்தோருக்கு வணக்கம் செலுத்தப்படும்.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் ஈழத்தில் சிங்கள ராணுவத்தின் கெடுபிடிகளாலும் தடைகளாலும் இத்தகைய நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு இலங்கை ராணுவத்தைப் பற்றி எந்த கவலையும் படாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் உடுத்துறை, சாட்டி; வல்வெட்டித்துறை தீருவில் திடல்; கோப்பாய்; முல்லைத்தீவு இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, அலம்பில், வன்னிவிளாங்குளம்; மன்னார் ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான்; வவுனியா ஈச்சங்குளம்; திருகோணமலை ஆலங்குளம்; மட்டக்களப்பு தரவை, மாவடிமுன்மாரி, கண்டலடி; அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும் உணர்வுப்பூர்வமாக மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் மாவீரர்களின் உறவினர்களும் பங்கேற்றனர்.