சென்னை வந்து சேர்ந்தார் மகா தமிழ்ப் பிரபாகரன் -ராணுவம் சித்திரவதை செய்ததாக புகார்
வன்னிக்கு சுற்றுலா விசாவில் பயணம் மேற்கொண்ட தமிழ் பிரபாகரனை, விசா விதிமுறை மீறல் காரணம் காட்டி கைது செய்தது இலங்கை அரசு. அவரை தீவிரவாதிகளை விசாரிக்கும் கொழும்பின் நான்காம் மாடி கட்டடத்தில் அடைத்தது.
இந்தக் கைதுக்கு உலகமெங்கும் கிளம்பிய எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து அவரை குடிவரவுத் துறையிடம் நேற்று ஒப்படைத்தது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் பிரபாகரனை இன்று சந்தித்தனர். அவர்கள் தமிழ் பிரபாகரன் நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ் பிரபாகரன் விசா விதிகளை மீறியதாகக் கூறி நாடு கடத்துவதாக இலங்கை அறிவித்து அவரை அங்கிருந்து அனுப்பியது. இதையடுத்து நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார் பிரபாகரன்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பிரபாகரன் பேசுகையில், என்னை இலங்கை ராணுவத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரிகள் கை விலங்கு போட்டு விசாரித்தார்கள். விசாரணையின்போது நான் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டேன்.
நான் ராணுவ முகாமை படம் பிடித்ததாக கூறப்பட்டது. ஆனால் நான் அப்படி படம் எதையும் எடுக்கவில்லை. ஒரு விழாவைத்தான் நான் படம் பிடித்தேன். நான் படம் பிடித்தபோது அங்கு ராணுவ அதிகாரிகளும் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில்தான் நான் படம் எடுத்தேன் என்றார் பிரபாகரன்.