உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதக் கடத்தல்: மகிந்த ராஜபக்சேவும் சிக்குகிறார்!!
கொழும்பு: உக்ரைனில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் சிக்க இருக்கிறார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு தேநீர் விடுதி நடத்தி வந்தார் ராஜபக்சே மருமகன் உதயங்க. பின்னர் அதை உணவு விடுதியாக்கினார்.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபரான போது தேநீர் விடுதி நடத்திய உதயங்க வீரதுங்காவை ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதராக்கினார். அவர் பதவி வகித்த காலத்தில் உக்ரைனில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்தார் என உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் உக்ரைன் அரசு இது தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜபக்சே மருமகன் உதயங்க தலைமறைவானார்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜித் பெரேரா, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கான ஆயுதக் கடத்தல் குறித்து சர்வதேச அளவில் விரிவான விசாரணை நடைபெற உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் (மகிந்த ராஜபக்சே) நிச்சயம் பிடிபடுவார்கள் என்றார்.