3 மாதங்களில் அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் மகிந்த ராஜபக்சே?
கொழும்பு: தீவிர அரசியலில் இருந்து தாம் 3 மாதங்களில் விலகிவிடுவேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ராஜபக்சே ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கினார் ராஜபக்சே. அத்துடன் பிரதமர் பதவியையும் குறி வைத்துப் பார்த்தார் ராஜபக்சே. ஆனால் அதிபர் சிறிசேனவோ, என்னதான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வென்றாலும் நிச்சயம் ராஜபக்சேவை பிரதமராக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
தேர்தலிலோ ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்றது. இதனால் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது. அதேபோல் மகிந்த ராஜபக்சே சார்ந்துள்ள சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பங்கேற்பதால் எதிர்க்கட்சியாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராஜபக்சேவின் எதிர்க்கட்சித் தலைவர் கனவும் தவிடுபொடியானது.
இதனால் ஒரு முன்னாள் அதிபர், வெறும் எம்.பி.யாக மட்டுமே நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனை மிகவும் கடுமையாக விமர்சித்து இலங்கை ஊடகங்கள் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அண்மையில் அதிபர் சிறிசேனவை சந்தித்த மகிந்த ராஜபக்சே, என் மீது எந்த ஒரு கடும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட வேண்டாம்.. இன்னும் 3 மாதத்தில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக அரசியலில் இருந்தே வெளியேறிவிடுவேன் எனக் கூறியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.