நவம்பர் 14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... சிறிசேனா முடிவில் மாற்றம்!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ல் கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றம் கூடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கே கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா, திடீரென அந்தக் கட்சியுடனான கூட்டணியை முறித்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்த நீக்கம் செய்தார். இந்த சூட்டோடு சூடாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்து பொறுப்பேற்கவும் செய்தார்.
சிறிசேனாவின் இந்த திடீர் மாற்றம் இலங்கை அரசியல் மட்டுமின்றி உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பெரும்பான்மை இல்லாத போதும் ராஜபக்சேவை பிரதமராக பொறுப்பேற்க வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை கூட்டி முறைப்படி பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
[10 காமாண்டோ படை, 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு... நடைதிறப்பால் பரபரப்பில் சபரிமலை!]
நாடாளுமன்றத்தை முடக்கிய சிறிசேனா
சிறிசேனாவின் அதிரடி அறிவிப்பால் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். இந்நிலையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதாக சிறிசேனா அறிவித்தார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக சிறிசேனா அறிவித்தார்.
நாடாளுமன்ற முடக்கம் நீக்கம்
ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக நாடாளுமன்ற முடக்கத்தை திரும்பப்பெற்றார். நவம்பர் 16ல் நாடாளுமன்றம் கூடும் அன்றைய தினம் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.
நவம்பர் 14ல் கூடுகிறது
இதனிடையே நேற்று இரவு அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ள அரசாணையில் நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 14ல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லை
225 உறுப்பினா்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக 100 உறுப்பினா்களும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 103 உறுப்பினா்களும் உள்ளனா். மீதமுள்ள 22 உறுப்பினா்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினா்கள் உள்ளனா். இலங்கை தமிழா்கள் மீது போா் நடத்திய காரணத்திற்காக ராஜபக்சேவுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது.
எம்பிகள் ஆதரவிற்காக
இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுபவரே பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வேறு வழியின்றி ராஜபக்சே தரப்பினர் குதிரை பேரங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிலருக்கு பணம் கொடுத்து தங்கள் வசம் இழுக்கும் முயற்சிகளை ராஜபக்சே தரப்பில் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.