மொரிஸியஸ் புறக்கணிப்பினால் 2015 காமன்வெல்த் மாநாடு மால்டாவிற்கு மாற்றம்
இலங்கையில் கடந்த 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்று வரும் இந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது.
காமன்வெல்த் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வறுமையை ஒழிப்பதே உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சாவல் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகளை காப்பது உள்ளிட்டவைகளும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், காமன்வெல்த் அமைப்பின் அடுத்த மாநாடு 2015ஆம் ஆண்டு மால்டாவில் நடந்த முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதை கண்டித்து அந்த மாநாட்டை மொரிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் புறக்கணித்தார். அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டப்படி 2015ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த காமன்வெல்த் மாநாட்டை நடத்தப்போவதில்லை என்றும் மொரிசியஸ் அறிவித்துள்ளது.
தங்களது எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தியதை கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மொரிசியஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் முழுவதுமாக மூடி மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
அடுத்த மாநாட்டை நடத்தும் நாட்டின் தலைவர் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது மரபு. எனவே கொழும்பில் நடத்தப்பட்ட மாநாட்டை மொரிசியஸ் புறக்கணித்ததால் அடுத்த மாநாட்டை நடத்துவது மரபுக்கு மாறானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களால் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் மொரிஸியசில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாடு, தற்போது மால்டாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2005ம் ஆண்டு காமன் வெல்த் மாநாடு மால்டாவில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.