3வது முறையாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக மங்கள சமரவீர....
கொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் மங்கள சமரவீரவுக்கு மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார்.
பெரும்பான்மைக்கு 7 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில் ரணில் ஆட்சி அமைக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சி ஆதரவு தருகிறது. இதனால் இலங்கையில் தேசிய அரசு ஒன்று அமைய உள்ளது.
இதற்கு ஏற்ப அமைச்சர்கள் நியமனம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் 3 முக்கிய துறை அமைச்சர்கள் மட்டும் இன்று அவசரமாக அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.
மங்கள கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் மற்றும் விஜயதாச ராஜபக்சே ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மங்கள சமரவீர மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறை அமைச்சர் பொறுப்பு விஜயதாஸ ராஜபக்சேவுக்கும் மீள்குடியேற்ற துறை டி.எம்.சுவாமிநாதனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005- 2007ஆம் ஆண்டு காலத்திலும் 2015ஆம் ஆண்டிலும் மங்கள சமரவீர வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது அவர் 3வது முறையாக வெளியுறவுத் துறை அமைச்சராகியுள்ளார்.
இலங்கையில் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் மங்கள சமரவீரவுக்கு மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகியுள்ளார்