ராஜபக்சே கட்டிய விமான நிலையத்தில் அரிசியைக் கொட்டி வைக்க உத்தரவு!
ஹம்பந்தோட்டா: ராஜபக்சே அதிபராக இருந்த சமயத்தில், ஹம்பந்தோட்டா மாவட்டம் மாத்தள என்ற இடத்தில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும் அங்கு அரிசி மூடைகளை சேமித்து வைக்கும் கிட்டங்கியாக அதைப் பயன்படுத்தவும் சிறிசேன அரசு உத்தரவிட்டுள்ளதாம்.
மாத்தளவில் ராஜபக்சே ஆட்சிக்காலத்தின்போது சர்வதேச விமான நிலையம் ஒன்று கட்டப்பட்டது. இந்த விமான நிலையத்தின் தலைவிதி தற்போதைய அதிபர் சிறிசேன அரசால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதை அரிசி கொடவுனாக மாற்றி விட்டனராம்.
ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த விமான நிலையத்தின் சேவைகளை நிறுத்தி விட்டனர். அந்த விமான நிலையத்தை தற்போது பராமரிப்பு மையமாகவும், சரக்குகளை இருப்பு வைக்கும் கிட்டங்கியாகவும் மாற்றியுள்ளனராம்.
இந்த விமான நிலையத்தால் பெரும் செலவு ஏற்படுவதாகவும், பயணிகள் பெருமளவில் இங்கு வருவதில்லை என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த விமான நிலையத்தை ரூ. 250 மில்லியன் செலவிட்டு கட்டினார் ராஜபக்சே. ஆனால் பயணிகளோ அறவே வருவதில்லையாம். விமான நிலையத்தை மூடுவதற்கு முந்தைய மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் வெறும் 2 பயணிகள் மட்டுமே இங்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பணியாற்றி வந்த விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையம் மற்றும் ரத்மலனா விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.
விமான நிலையம் அமைந்துள்ள இடம் ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்திற்குள் வருகிறது. எனவேதான் இந்த இடத்தில் கொண்டு வந்து விமான நிலையத்தைக் கட்டினார் ராஜபக்சே. ஆனால் பயணிகள்தான் யாரும் வரவில்லை. மேலும் இது காட்டுப் பகுதியாகும். விலங்குகள் நடமாட்டம் அதிகம். பறவைகளும் அதிகம். எனவே விமானங்களுக்கும் அபாயம் இருந்து வந்தது. இருந்தாலும் வம்படியாக இதை செயல்படுத்தி வந்தனர். இதையடுத்து தற்போது சிறிசேன அரசு இதற்கு மூடு விழா கண்டுள்ளது.
தற்போது இந்த விமான நிலையத்தை கிட்டங்கியாக மாற்றியுள்ளனர். அங்கு அரிசி மூடைகளை கொண்டு வைத்து இருப்பு வைத்து வருகின்றனராம். சிறிசேன அரசின் இந்த செயலால் ராஜபக்சே ஆதரவாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.