இலங்கைக்கு ஆதரவு அளிப்பதா.. சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அழைப்பு
கொழும்பு: இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட மே-17 இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அமெரிக்காவை கண்டித்து செப்டம்பர் 11, 2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்படும். அனைவரும் அணிதிரண்டு வாரீர்.
மேலும், ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை 22 ஜூலை-2015 மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த ஒரு வருடங்களில் நமக்கு எதிராக சர்வதேசங்கள் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம் நடக்கிறது.
ஈழ விடுதலை போராட்டத்தை குறித்த நமது செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளும் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் சமர்பிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும் அனைத்து தோழர்களும் பங்கேற்க வேண்டுகிறோம். இடம்: செ தெ நாயகம் பள்ளி, தி நகர், சென்னை. நாள்: 22-ஜூலை-2015, மாலை 5 மணி. இவ்வாறு மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.