யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் மோடி!
டெல்லி/யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் சீரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இலங்கையில் 30 ஆண்டுகாலமாக நீடித்த யுத்தத்தில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு சிதலமடைந்தது. 2009-ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தது.
இதன் பின்னர் இலங்கையில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தையும் இந்தியா சீரமைத்துத் தர முன்வந்தது.
ரூ7 கோடியில் சீரமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கத்தை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதிபர் சிறிசேன முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகிறது. தற்போது துரையப்பா விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்றார்.
அதேபோல் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, விளையாட்டரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.