ராஜபக்சே பாதுகாப்பு வாபஸ் விவகாரம் - இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி- எம்.பி.க்கள் படுகாயம்
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் மோதலாக வெடித்தது. இதில் எம்.பி.க்கள் தாக்கிக் கொண்டதில் பலர் படுகாயமடைந்தார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஆகி விடவேண்டும் என்ற அவரது கனவும் தவிடுபொடியானது.
இதைத் தொடர்ந்து ராஜபக்சேவுக்கான ராணுவ பாதுகாப்பை தற்போதைய சிறிசேனா அரசு நேற்று முன்தினம் திடீரென திரும்பப்பெற்றது. பயிற்சி பெற்ற 50 ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு பதிலாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த விவகாரம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசமாக குரல் கொடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சரத் பொன்சேகா விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது ராஜபக்சே ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் எம்.பி.க்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.