ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி
கிளிநொச்சி: ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10-வது ஆண்டை முன்னிட்டு இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடலில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ தனிநாடு கோரி யுத்தம் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ல் முடிவுக்கு வந்தது. இலங்கை ராணுவத்துடனான இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழினத்தின் மிகப் பெரும் துயரான ஈழத் தமிழர் இனப்படுகொலையில் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நந்திக் கடலில் இன்று அதிகாலையில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று! தமிழர்கள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட தமிழர் வாழும் பிரதேசங்களில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இந்நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.