போலீசாரின் கடும் எதிர்ப்பு- யாழ். பல்கலை-ல் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அமைக்க அடிக்கல்
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இதனை மீறி நினைவுதூபிக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் மாணவர்கள் அடிக்கல் நாட்டினர்.
யாழ். பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி 2019-ல் அமைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தூபி அமைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு
இதனை திடீரென இலங்கை போலீசார் இடித்து தரைமட்டமாக்கினர். இது உலகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கை தமிழ் தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இந்த இடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மீண்டும் நினைவு தூபி
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினர். இதனையடுத்து இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுதூபி கட்டுவதற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
மாணவர் போராட்டம் வாபஸ்
அப்போதும் இலங்கை போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு அவர்களது உண்ணாவிரதமும் முடித்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபை அனுமதி
இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் கட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை அனுமதி வழங்கி இருக்கிறது என்று யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்த தூபியை கட்டுவதற்கான நிதியை திருகோணமலையை சேர்ந்த ஒருவர் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.