இலங்கை: முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவு நாள்- கதறல் ஓலங்களால் சோகமயம்!
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
கிளிநொச்சி: தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை நினைவுகூறும் வகையில் மே 18-ந் தேதி தமிழ் இனப்படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
மே 12-ந் தேதி முதல் தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இலங்கை மற்றும் உலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் இனப்படுகொலை வாரம் கடைபிடிக்கப்பட்டது.
தமிழர்கள் ஒன்று கூடல்
இன்று முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடினர். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபை மேற்கொண்டிருந்தது. மதச்சடங்குகள், ஈகைச் சுடர்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட உறவினர்களுக்கு தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இருசக்கர வாகனப் பேரணி
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக முள்ளிவாய்க்கால் சென்றடைந்தனர். நந்திக்கடலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு மாகாணத்தில்..
இதேபோல் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலும் உணர்வுப்பூர்வமாக இனப்படுகொலை நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.
மலரஞ்சலி
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன், டாக்டர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.