7 தமிழர் விடுதலை: இலங்கையில் 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டுகிறார் முருகனின் தாயார்!
கிளிநொச்சி: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி இலங்கையில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்துகளை திரட்டி பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக ஆயுள் தண்டனைக் கைதி முருகனின் தாயார் சோமினி கூறியுள்ளார்.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன் உட்பட 7 தமிழர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதனால் தமிழக அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சியில், தமிழக சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவரான முருகனின் தாயார் சோமினி கூறியதாவது:
என் மகன் உள்பட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கொடிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உலக தலைவர்கள் மன்னித்ததற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன. அதுபோல், என் மகனுக்கும் கருணை காட்டப்படும் என்று நம்புகிறேன்.
அதற்காக என் மகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, இலங்கையில் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். 10 லட்சம் கையெழுத்துகளை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
இந்த கையெழுத்துகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு சோமினி கூறினார்.