'வடக்கில் பெரும் முன்னேற்றம்... இலங்கை ராணுவத்துக்கு நன்றி!'- முத்தையா முரளிதரன்
ஆனால் அங்குள்ள தமிழர் பிரதிநிதிகளோ ராஜபக்சே கரங்களால் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள்.
இன்னொரு பக்கம் முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது!
வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது... அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்திக்கிறார்.
அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் கூறியுள்ளதைப் படியுங்கள் (ஆங்கிலத்திலும் தந்துள்ளோம்):
"என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.
மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும்.. இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான்.
இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!"
நல்லவேளை, வடக்கில் தமிழரின் அவலநிலையை கேமரூனே நேரில் பார்த்துவிட்டார்!!